TVK: புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் என்பதால், அவரை பார்க்க கூடிய கூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமையின் சதி திட்டம் என்று தவெக நிர்வாகிகள் கூறி வர, தவெகவின் அரசியல் அறியாமை என்று திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வந்தனர்.
இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், தனி நபர் குழு அமைத்தது. தேசிய கட்சியான பாஜகவும் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. இதனை ஏற்காத தவெக, சிபிஐ விசாரணையை கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசு மீது தவெக குற்றம் சுமத்தி இருப்பதால் இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த குழு விசாரிக்க கூடாது என்று கூறி இதனை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ, கரூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகம் தேர்தலை நோக்கி வேகமெடுத்துள்ள நிலையில், கரூர் சம்பவம் மற்றும் சிபிஐ விசாரணை போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.