ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்தில் ரவுடிகளை பிடிக்க போலீசார் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை தொடர ஆரம்பித்தது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் போன்ற அனைத்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைத்து ரவுடிகளையும் உடனடியாக கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டது.
மேலும் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய தீவிர தேடுதல் வேட்டை நடந்தினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் வரை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் 30 பழங்குற்றவாளிகள் நன்னடத்தை சான்று அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும் நபர்கள் 37 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 288 தங்கும் விடுதிகள் மற்றும் அனைத்து திருமண மண்டபங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் ஒரே நாள் இரவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மட்டும் 1658 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற தீவிர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும் என்று கூறினார்.