சென்னை மாநகராட்சி வார்டுகள் மண்டல வாரியாக பிரிப்பதற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
115

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்து இருக்கின்ற பொதுநல மனுவில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் இருக்கின்ற 200 வார்டுகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கும், பெண்களுக்கும், 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

மீதம் இருக்கின்ற வார்டுகளில் பெண்களுக்கு 89 வார்டுகளும், ஆண்களுக்கு 79 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2016ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு 84 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் ஆனால் கூடுதலாக ஐந்து வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பிடி ஆதிகேசவலு முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மாநகராட்சியில் எஸ்சி எஸ்டி ஒதுக்கீடு போக மீதம் இருக்கக்கூடிய வார்டுகளை சரிசமமாக பிரிக்க வேண்டும் ஆனால் அதிகாரிகள் மண்டல வாரியாக பிரித்து பெண்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர் சண்முகசுந்தரம் சென்னையை பொறுத்த வரையில் மத்திய சென்னையில் தான் அதிக பெண்கள் இருக்கிறார்கள், புறநகர் பகுதியில் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மண்டல வாரியாக வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று வாதிட்டார்.

ஆனாலும் இவருடைய வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்குவதால் பெண்களுக்கு 53% வார்டுகள் ஒதுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற இடங்களில் எண்ணிக்கை அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. அதை மீறக்கூடாது ஆகவே மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை உள்ளிட்டவற்றை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.