பெங்களூரு வந்தது உக்ரைனில் பலியான நவீன் சேகரப்பாவின் உடல்!

0
133

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ந்து மிகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

இதனை நிறுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் கூட தனக்கிருக்கின்ற வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது ரஷ்யா.

இந்த நிலையில், கடந்த 1ம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த சண்டையின்போது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் பலியானார் அவருடைய உடல் உக்ரைலுள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவருடைய பெற்றோர் மத்திய, மாநில, அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் நவீன் சேகரப்பாவின் உடல் விமானம் மூலமாக நேற்று அதிகாலை பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் நவீன் சேகரப்பாவின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக நவீன் உடல் வைக்கப்படுகிறது.

இறுதிச்சடங்கு முடிவடைந்த பின்னர் நவீன் உடல் மருத்துவ படிப்புக்காக எஸ்.எஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று நவீன் தந்தை சங்கரப்பா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.