DMK CONGRESS: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அடுத்த முறையும் ஆட்சியில் அமர வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அங்கு திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து அதனை தன் வசப்படுத்தும் முயற்சியையும் கையிலெடுத்துள்ளது.
மேலும், கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளோ புதிய புதிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவது ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த வகையில் முதன் முதலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்ற வாதத்தை முன் வைத்தது. பீகார் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலினிடம் பேச காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இவர்கள் இன்று ஸ்டாலினை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஏன் வழங்க கூடாது என்ற குரல் ஓங்கி வரும் நிலையில் தற்போது காங்கிரசின் கோரிக்கை திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
