திமுக ஆட்சிக்கு வந்ததும் கைதாகும் முதல் மூன்று நபர்கள்: முக ஸ்டாலின்
திமுக ஆட்சி வந்ததும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்த்து கைதாக போகிற முதல் இரண்டு பேர் தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும்தான் என இன்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை அனைவரும் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை. திமுகவை விமர்சிப்பவர்கள் மத்திய அரசை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கோமா நிலையில் கிடக்கிறது.
தியாகம், சிறை, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்; ஸ்டாலினை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை, சிறைக்கு பயந்தவன் நான் இல்லை. ஒன்றல்ல பல முறை சிறைக்கு சென்றவன் நான்; சிறை சென்றது கொலை செய்துவிட்டோ, கொள்ளையடித்து விட்டோ அல்ல, மக்கள் பிரச்னைகளுக்காக பல முறை சிறை சென்றவன் நான்.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியாது, கோவையில் கொடிகம்பத்தால் அனுராதா கால் பறிபோனது தெரியாது, ஆனால் ஊழல் செய்வது மட்டும் நன்றாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்… கடப்பாறையை முழுங்கிவிட்டு கம்முன்னு இருப்பவர்தான் அவர்’ இவ்வாறு முக ஸ்டாலின் ஆவேசமாக தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்
பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
சமூக நீதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் சமூக நீதிக்காக போராடி வரும் தலைவர்களில் முதன்மையானவரான மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை நிர்ணயிப்பதும், பதவி உயர்வு வழங்குவதும் சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்காக 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை ரத்து செய்தும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் கூட, சமூக நீதியின் பார்வையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக 2003-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை சமூகநீதியை காக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் சில திருத்தங்களை செய்த தமிழக அரசு, 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை சேர்த்தது. இந்த பிரிவுகளின்படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் தமிழக அரசுத் துறை பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மறைமுக இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்தேதியிட்டு பணிமூப்பு வழங்கும் பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பலர் கடுமையாக பாதிக்கப் படுவர். இது தேவையற்ற குழப்பங்களையும், பணியிடங்களில் சங்கடங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
சட்டத்தின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வகுத்துக் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படியும் பார்த்தால் இந்தத் தீர்ப்பை குறை கூறவோ, விமர்சிக்கவோ முடியாது. அதேநேரத்தில் நியாயத்தின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், நியாயமற்ற காரணங்களின் அடிப்படையில் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் பதவி உயர்வு வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்படவில்லை; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தேவைகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர, தானாக வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற இரு அம்சங்கள் தான் இந்த தீர்ப்பின் அடிப்படை ஆகும். ஆனால், பணி நியமனங்களில் மட்டுமின்றி பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்த நிலை பணியில் சேர்ந்தனரோ, அதே நிலை பணியிலேயே ஓய்வு பெறுவது எந்த வகையில் சமூகநீதியாக இருக்க முடியும்?
அதேபோல், தமிழக அரசுத் துறைகளாக இருந்தாலும், மத்திய அரசுத் துறைகளாக இருந்தாலும் உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை. தேவையின் அடிப்படையில் தான் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை இந்தக் காரணம் நியாயப்படுத்துகிறது. இத்தனை நியாயங்களுக்குப் பிறகும் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு தடையாக இருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் தான். சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காக அதில் தேவையான திருத்தங்களை செய்வதில் தவறில்லை.
மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப் பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 16வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவை சேர்ப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் 117 ஆவது திருத்தத்தை மத்திய அரசு செய்தது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதே உட்பிரிவை திருத்தி ‘‘மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’’ என்ற சொற்களை சேர்ப்பதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது
இந்தூரில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி சற்று முன் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
இந்திய சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக வங்கதேச அணியின் தோல்வியை அடைந்து வருவது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதே நேரத்தில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு இன்று தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது,. அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை, படத்தை பாடம் என்று சொல்லி தன் மேலேயே தானே நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,.
பாமக ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தமிழக பாஜகவும் சும்மா விடுமா என்ன அவர்களும் தங்கள் பங்குக்கு நாங்களும் செய்கிறோம் என்று திமுகவை கதறவிட்டுக் கொண்டிருக்கிறது,. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு இதுதான் சமயம் என்று எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடியை கொடுத்து வருகிறது பாஜக,.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் L.முருகனிடம் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி இடம் தான் என்றும் அதனை ஆய்வு செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தது தமிழக பாஜக,. இந்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு முரசொலி இடத்தை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,.
இந்த சூழ்நிலையில் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், திமுக இளைஞரணி தலைவரும் முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்குனருமான திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது,. அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் வரும் 19 ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கும்படி குறிப்பிட்டுள்ளது. இது திமுகவினரை கதிகலங்கச் செய்துள்ளது. மத்திய அரசு இதற்கு பின்னாலிருந்து செயல்படுவதாக திமுக உடன்பிறப்புகள் ஆங்காங்கே புலம்பி வருகின்றனர்.
முரசொலி விவகாரம் தற்போது முடித்து வைக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது, பாமக பற்ற வைத்த நெருப்பு இன்று பாஜக மூலம் கொழுந்துவிட்டு எரிகிறது நாளை காட்டுத்தீ போல் எரியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் பிரபல SRM பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான திரு.பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சந்திப்பு நிகழ்வில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழறிஞர்களுக்கு பல்வேறு பெயர்களில் ‘தமிழ்ப்பேராயம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் திரு.கலைஞர் கருணாநிதி பெயரிலும் தமிழ்ப் பேராயம் விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கவே வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர்.
மேலும் கலைஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தனது நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரு மாத ஊதியத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார். வேறு எதுவும் பேசாமல் விட்டாலும் பல சந்தேகங்களை இந்த சந்திப்பு நிகழ்வு எழுப்பி உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.இவருடைய மரணம் நாடு முழுவதும் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவிற்கு ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப்க்கு முக்கியத்துவம் கொடுத்து நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
இதில் முதன்மையாக நின்று செயல்படுபவர் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்த தற்கொலை நிகழ்வுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். நேற்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது மகள் தற்கொலையில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்,.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று பச்சமுத்து அவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த ஓராண்டில் SRM பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திள் உள்ளேயே அடுத்தடுத்து மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டனர். இதனை ஒரு சில மீடியாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வந்தன.
பல மீடியாக்கள் இதனை செய்தியாக கூட வெளிப்படையாக வெளியிடவில்லை, மேலும் இதை மூடி மறைத்தது இந்த தற்கொலைக்கு நீதி கேட்டு எவரும் முன்வராத அளவிற்கு செய்துவிட்டது பாரிவேந்தரின் SRM பல்கலைக்கழகம்,. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரு இரங்கல் செய்தியை கூட வெளியிடவில்லை.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தை பற்றி பல மர்மங்கள் நீடித்துக் கொண்டே வருகின்றன,. பெரும்பாலும் இங்கு படிக்கும் மாணவர்கள் வசதி படைத்தவர்களாகவும் மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் உள்ளனர்,.
செய்தி சேனல்கள் பெரும்பாலும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதால் SRM மாணவர்களின் தற்கொலையை அப்பட்டமாக மறைக்கும் விதமாக செயல்பட்டன. பாத்திமா தற்கொலையை விவாதமாக எடுத்து நடத்திக்கொண்டிருக்கும் “புதிய தலைமுறை தொலைக்காட்சி” தனது உரிமையாளரான பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்வை செய்தியாக கூட வெளியிடவில்லை.
சமூகவலைத்தளங்களில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் தற்கொலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சமூகவளைத்தளவாசிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்,.
இதனால் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் காரணமாக திடிரென அறிக்கை விட்டால் தனது இமேஜ் மொத்தமாக பாதித்து விடும் என்பதால் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற SRM பல்கலைக்கழக தலைவர் பாரிவேந்தர் அவர்கள் அவசரஅவசரமாக ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தெரிகிறது,. ஏற்கனவே முரசொலி இடம் பஞ்சமி நிலம் தான் போன்ற எதிர்ப்பை பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் அவர்களும் SRM பல்கலைக்கழகம் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருவதால் இதனை பற்றியும் பேசியதாக தெரிகிறது,.
தனது கூட்டணி கட்சியான பச்சமுத்துவை தனது கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலையை பற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று விரைவில் அறிக்கை விடுவார் என்று பொதுமக்களும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??!
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. முன்னதாக மாணவி பாத்திமா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!
இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. சமீப காலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மன உளைச்சலை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது என்பது வருந்தத்தக்க விசயமே. மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் இந்த மன உளைச்சல் அவர்களின் படிப்பு சம்பந்தமானது,பாலியல் அச்சுறுத்தல் அல்லது மதம் மற்றும் சாதி சார்ந்த வெளிக் காரணிகள் என நிறைய உள்ளன.
தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் இறப்பில் கூட மதம் சார்ந்த குற்ற சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரே தவிர இதிலிருந்து மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால் யாரிடம் முறையிட வேண்டும் என்று மாணவர்களுக்கு நேர்மறையாக எந்த நம்பிக்கையையும் கொடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எப்போ எங்கே மரணம் விழும் அதில் சாதி மத அரசியலை வைத்து ஆதாயம் அடையலாம் என்று காத்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதற்கு முன் திமுகவின் கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தர் அவர்களுக்கு சொந்தமான SRM பல்கலைகழகத்தில் தொடர்ச்சியாக பல தற்கொலைகள் நடைபெற்ற போது வாயே திறக்காத ஸ்டாலின் இந்த மரணத்தில் மட்டும் கருத்து தெரிவிக்கிறார் என்றால் அது அவருடைய சாதி மத பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை போன்ற மத்திய அரசின் கொள்கைகளுக்கு நடுவே தற்போது ஒரே நாடு ஒரே நாளில் சம்பளம் என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது
நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாள் தேர்வு செய்யப்பட்டு அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் இது தொடர்பான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற பிரதமர் மோடி ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும், அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரேமாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய புத்தகங்களை அனிதாவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு பரிசாக வழங்கினார். இந்த விலைமதிப்பில்லா புத்தகங்கள் பல புதிய அனிதாக்களை உருவாக்கி, மறைந்த அனிதாவின் ஆத்மாவை சாந்தியடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது:
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன். pic.twitter.com/X8t77naED3
பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் முக ஸ்டாலின்
அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் @mkstalin அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/eEVVFjCvA9
சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?
இலங்கையில் அதிபர் தேர்தல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் அங்கு அடுத்த அதிபர் யார்? என்பது விரைவில் தெரிந்துவிடும்
இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா அவர்களுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி உள்ளது. சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன் ஆவார். அதேபோல் கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் ராணுவ அமைச்சரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் ஒரு முக்கிய வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் பிரிக்கும் ஓட்டுக்கள் தான் சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபயா ஆகிய ஒருவரை அதிபராக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் சஜித் பிரேமதாசா கடும் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்பதும் இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்குகள் மற்றும் புதிய வாக்காளர்களே அடுத்த அதிபரை தேர்வு செய்யும் ஒரு சக்தியாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது
பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி
பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது
எனவே இந்த நீண்ட பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மனரீதியில் சோர்வு ஏற்படாமல் இருக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக விமானத்தின் ஒரு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விமானத்தின் இருக்கையில் இருந்தபடியே ஒருசில எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது
இந்த புதிய உடற்பயிற்சி வசதிக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து இந்த விமான நிறுவனத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதே திட்டத்தை உலகின் மற்ற விமான நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.