முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

0
77

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

திமுக கட்சி நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலமா? தனிபட்ட ஒருவருக்கு சொந்தமான நிலமா? என்ற தமிழக மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலான முகநூல் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த பதிவில் தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க பொதுமக்கள் போராடும் நிலையில், முறையான ஆதாரங்கள் இருந்தும் தருமபுரி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் இதைக் கண்டுக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது அந்த தனிபட்ட நபருடைய பிரச்சனையாக இருந்தாலும் தற்போது வைத்திருக்கும் பட்டா எந்த அளவிற்கு உண்மையானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது அவரின் பதிவு.மேலும் சாதாரண மக்களிடம் அரசு அதிகாரிகள் எந்த அளவிற்கு அக்கரையில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் இது உணர்த்துகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் மனுதாரர் சி.தங்கவேல் த/பெ சின்னசாமி என்பவருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் பகிர்ந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

நான் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவன். 2014 ல் எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதை தடுக்கப்பட்டது. ஊர் பெரியவர்களை வைத்து கேட்டதற்க்கு இது எங்கள் நிலம் இனி இதன் வழி யாருக்கும் வண்டி வாகன வழி இல்லை என்றார்கள்.
இல்லை இது பல தலைமுறையாக மக்கள் பயன்படுத்தி வரும் வழிதான்? இதில் ஓடையும் போகுது எப்படி பட்டா வந்தது? என நாங்கள் கேட்க அவர்கள் 1988 லியே அந்த நிலம் தங்கள் பெயரில் மாறிய பத்திரத்தை காட்டினார்கள்.

நாங்கள் பதறிப்போனோம், இது உண்மையெனில் எங்கள் பகுதியை சேர்ந்து 20 குடும்பங்களுக்கும், எங்கள் விவசாய நிலங்களுக்கும் செல்ல வழியே இல்லை என்ற நிலை உருவாகும்.

சரி என பாதைக்கான விலையை அனைவரும் இணைந்து கொடுத்துவிட்டு போகிறோம், வழி கொடுங்கள் என்றோம் , எதிர்த்தரப்பு ஏற்கவில்லை. மாறாக பாதையில் குழி வெட்டியது, முள்ளையும்,கல்லையும் போட்டு தடுத்தும் விட்டார்கள்.

பிறகு ஒரு நாள் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பெரியவர்கள் அந்த நிலம் மேய்ச்சல் நிலம்பா, கவர்மெண்ட் நிலம் . நாங்களே ஆடு மாடு ஓட்டிட்டு வந்தவங்க தான். இடத்திற்கு இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலை பேப்பர் மாத்திட்டு இருக்காங்க என்று சொன்னார் .

நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்தோம். அந்த நிலம் 1970 மார்ச் மாதத்தில் பிராமணர் ஒருவரின் குடும்பத்திற்கு பாகப்பிரிவினை பாத்திரத்தில் சொந்தமாகி இருந்தது. அதன் பழைய
அ- பதிவேட்டை கேட்டு மீண்டும் மனு செய்திருந்தேன் , அதில் அந்த நிலம் 1970 வரை மந்தைவெளி ஆக இருந்தது என்று பதில் வந்தது ஆவணங்களையும் இணைத்து அனுப்பினார்கள்.

பிறகு தான் தெரிந்தது அந்த நிலம் அந்தக் குறிப்பிட்ட பிராமணர் குடும்பத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அரசு மந்தைவெளி புறம்போக்கு நிலம் என்பதும், சுற்றியுள்ள அனைத்து நிலமும் அவர்கள் குடும்ப சொத்து என்பதால் அரசு நிலத்தையும் பாகப்பிரிவினை பத்திரத்தில் அவர்களுடையது என தவறுதலாக காட்டி இவர்கள் அதை முறைகேடான வழியில் தங்கள் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள் என்பதும் உறுதியானது.

அந்த போலியான பத்திரத்தை வைத்து அந்த பிராமனரின் வாரிசு தற்போது பாதையை தடுக்கும் எதிர்தரப்பினருக்கு வருவதை வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அதன் வழி ஏரிக்கு நீர் செல்லும் ஓடை இன்றுவரை FMB ல் உள்ளது. அதையாவது விட சொல்லி கேட்டால் அதையும் சேர்த்தே பட்டா வாங்கிவிட்டோம் என்கிறது எதிர்தரப்பு.

பிறகு மீண்டும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அந்த குறிப்பிட்ட நிலம் மந்தைவெளி புறம்போக்கு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கான செயல் முறைகள் ஏதாவது அரசால் பிறப்பிக்கப்பட்டதா? என்று கேட்டேன் அதற்கும் அவ்வாறான ஆணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பதில் வந்தது.

அடுத்ததாக மந்தைவெளி நிலம் தனி நபரின் பெயரில் (கிட்டத்தட்ட 1 ஏக்கர்) பட்டா வழங்க அரசுக்கு உரிமை உள்ளதா என RTI மூலம் கோரி இருந்தோம். அதற்கும் அவ்வாறு பட்டா வழங்க அரசு விதிகளில் இடமில்லை என பதில் கிடைத்தது.

இத்தனை ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு அரசுக்கு இந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்யவேண்டும் என 2017 ல் மனு செய்திருக்கிறோம் .

6 கிராம நிர்வாக அலுவலர் ,
4 வருவாய் ஆய்வாளர்,
6 வட்டாட்சியர்,
3 கோட்டாட்சியர்
3 மாவட்ட வருவாய் அலுவலர் என மாறிவிட்டார்கள்…

அனைத்து தரப்பும் விசாரணைக்கு அழைத்து விட்டது நாங்கள் சென்று எங்களிடம் உள்ள ஆவணங்களை காட்டினோம் . ஆனால் யாரும் முடிவு எடுக்காமல் எதிர்பார்ப்பை சமாதனம் செய்து வழி விட்டு விடுங்கள் இங்கேயே பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என சமாதானம் பேசி பார்த்தது, எதிர்தரப்பு எதற்கும் பதில் தராமல் வழக்கறிஞர் கொடுத்த துண்டு சீட்டை கொடுத்து விட்டு போனது. இப்பொழுதும் இந்த மனு எந்த முடிவும் எடுக்கப்படாமல் மாவட்ட வருவாய் அலுவலர் மேஜையில் தூங்குகிறது.

கடைசியாக வட்டாட்சியர் இந்த பாகப்பிரிவினை பத்திரத்தையெல்லாம் ஆதாரமாக ஏற்க முடியாது, இது அரசு நிலம் என்பதற்கு ஆதாரம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் இது உங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என மேற்குறிப்பிட்ட பிரமணர் குடும்ப வாரிசிடம் கேட்க அவர் அப்படி எதுவும் இல்லை என கைவிரித்துவிட்டார்.

இப்ப ட்விஸ்ட் என்னன்னா,
அந்த நிலத்தை நான் அபகரிக்க முயன்றதாகவும், அவர்கள் வீட்டு வயதான பெண்களை தாக்கி கொல்லப் பார்த்ததாகவும் என் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சரி வழக்கை அவர்கள் தொடுத்திருப்பதும் நல்லது தான் அங்கே போய் அது பொய், நிலமே அவர்களுடையதில்லை என அரசே எங்களிடம் கொடுத்த ஆவணங்களை காட்டலாம்ன்னு போனா கேஸ் இயரிங் எடுக்கவே மாட்டேங்கறாங்க, கேஸ் போட்ட அவங்களே வாய்தா வாங்கிட்ருக்காங்க.

1970 ஜனவரியில் மந்தைவெளி,
மார்ச்ல தனியார் பட்டா நிலம்… இதை கேட்ட என் மேல் வழக்கு…

அவ்வளவு தாங்க சட்டம்… அனைத்து ஆதாரங்களையும் தந்தும் சாமான்யர்களுக்கான நியாயமான உரிமையை கூட பெற்றுத் தர அதிகாரவர்கம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Ammasi Manickam