ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்!!

0
37

 

ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்…

 

ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்லவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார்.

 

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜேக்கி ஷெரூப், விநாயகன், மிர்ணா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்களும், டிரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவுள்ளது.

 

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அது போல அண்ணாத்த திரைப்படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் ஜெயிலர் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வழக்கமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியான பின்னர் இமயமலை சென்று பாபா சுவாமியை தரிசிக்க சென்று வருவார். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாக இமயமலை செல்லாமல் இருந்தார்.

 

இந்தமுறை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நாளை அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலை செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.