தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

0
60

திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப் படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக திட்டங்குளம் ஊராட்சியில் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி, விளாத்திகுளம், தொகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை மனுவாக ஸ்டாலினிடம் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பலர் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எல்லாவற்றையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நூறு தினங்களுக்கு மேலாக போராடிய மக்கள் மே மாதம் 22ஆம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக சென்ற சமயத்தில், மனுவை பெற்று இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வந்திருக்காது ஆனாலும் ஆட்சியர் மக்களை அலட்சியம் செய்து விட்டார் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக, கூட்டத்தை கலைக்கிறோம் என தெரிவித்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். அதோடு அதில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். அது ஒரு கருப்பு தினம் இந்த சம்பவம் நடந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வினவியபோது அப்படியா நான் இன்னும் டிவி பார்க்கவில்லை என்று முதலமைச்சர் சொல்லியிருந்தார்.

இங்கே துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்த சமயத்தில் முதல்வரோ சேலத்தில் தன்னுடைய உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் .அவர் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. அந்தக் கொடுமைக்கு பிரதமர் மோடி இதுவரையில் வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஆகவே திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த தினமே நியாயம் கோரி போராட்டம் நடத்திய எல்லோர் மீதும் இருக்கின்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார்.