பரபரப்பு! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு ஆரம்பம்!

0
92

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று ஒட்டுமொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 12838 வார்டுகள் இருக்கின்றன இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

வேட்புமனுவில் பரிசீலனையின் போது 2062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன .14 ,124 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றார்கள். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்கள் எந்தவிதமான பயமுமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளில் 1960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் 3 பேர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் கோயம்புத்தூர் நகரில் மட்டும் 2723 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. இதில் கடைசி ஒரு மணி நேரம் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மற்றும் நோய்தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்கலாம் என்றும், தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், வாக்காளர்கள் 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்கவேண்டும், வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் உரிய டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்குவார்கள். 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதோடு மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மற்றும் நோய்த்தொற்று பாதித்த நபர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் போதுமான பாதுகாப்பு உடையணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.