கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

0
108

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக இந்த ஊதிய உயர்வு அமல்படுத்த முடியமால் போனது.

முன்பு இருந்ததைவிட இந்த கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள்அதிக வேலைச் சுமை உடன் தனது உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கொரோனா பரவல் ஆரம்பித்த புதிதில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்காகக் கையைத் தட்டுவோம். விளக்கேற்றுவோம்; “அவர்கள் காலைக் கழுவி பூஜை செய்வோம்”என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடந்தன.அது பிரச்சாரங்கள் ஆகவும் சமூக வலைதளங்களின் பதிவீடாகவுமே போனது. ஆனால் அவர்களின் துயரம் வறுமை ஒழிந்த பாடில்லை.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி பவானிசாகர் ஆகிய மூன்று ஒன்றியங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒன்று கூடி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கைகளைத் தட்ட வேண்டாம்; கால்களைக் கழுவ வேண்டாம்; எங்களுக்கு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்கு’ என்ற முழக்கத்துடன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் சார்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் வட்டாட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவையும் அளித்தார்கள்.

இது தொடர்பாக பி.எல்.சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில் “போராட்டத்தில் கலந்துகொண்ட மூன்று ஒன்றியத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இருக்கின்றார்கள்.இவர்கள் வாங்கும் ரூ.2,600 சம்பளம் என்பது வந்து போகிற செலவிற்க்கு கூட பத்துவதில்லை. இவர்களின் வாழ்வாதாரம் சீர்குழைந்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தப் பணியை விட்டுவிட்டு வேறு பணிக்குச் செல்லும் நிலையில் உள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக மார்ச் மாதமே அரசு அறிவித்துவிட்டாலும், கடந்த நான்கு மாதங்களாக அதற்குரிய அரசு ஆணைகள் பிறப்பிக்கப் படவில்லை.ஆகவே, உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சர் இது சம்பந்தமாக உரிய ஆணைகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Pavithra