தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு!

0
75

தமிழகத்தில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆகவே தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென் இலங்கை கடலோரப் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்து இருக்கிறது.

நெல்லையில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மாலையில் மழை பெய்ய தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை, கொக்கிலக்ளம் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா மத்திய பேருந்து நிலையம் கல்லட்டி தலைக்குந்தா போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடுமையான குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டது. தலைநகர் சென்னையில் இன்று காலை முதலே ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அண்ணா சாலை, அடையார் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.