“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்தார்.
“மேற்கு வங்கம் இன்று ஊழல், வன்முறை, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் சிக்கிய மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு மாநில அரசே காரணமாக உள்ளது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த நிகழ்வுகள், இந்த அரசாங்கத்தின் இரக்கமற்ற முகத்தை காட்டுகின்றன.
சமாதானம் என்ற பெயரில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் முற்றிலும் செயலற்று நிற்கிறார்கள். இளம் தலைமுறையும், ஏழை மக்களும், குறிப்பாக பெண்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
மம்தா பானர்ஜியின் கட்சி 24 மணி நேரமும் அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது; மாநில வளர்ச்சி குறித்து சிறிதும் அக்கறை இல்லை. அதனால் தான் மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மாதிரியாக, விரைவில் ‘ஆபரேஷன் பெங்கால்’ என்ற திட்டத்துடன் மேற்கு வங்கத்தை மீட்டெடுக்க விரும்புகிறது”
என மோடி தெரிவித்தார்.
இந்தக் கருத்துகள், குறிப்பாக “ஆபரேஷன் பெங்கால்” மற்றும் பெண்கள் நலன் குறித்து மோடி பேசிய விதம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமரின் பேச்சு குறித்து கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் பேசியதாவது “பிரதமர் மோடி, பெண்களின் மரியாதையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பெண்களின் வாழ்க்கையை அரசியல் கருவியாக்கும் முயற்சி. சிந்தூர் என்பது ஒரு பெண்ணின் கணவரால் தரப்படும் மரியாதையின் அடையாளம்.
பிரதமர் மோடி, நீங்கள் எல்லா பெண்களுக்கும் கணவர் அல்ல. உங்கள் சொந்த மனைவிக்கு கூட சிந்தூர் கொடுக்க தயங்கிய நீங்கள், இப்போது நாங்கள் அனைவருக்கும் உரிமை கொண்டது போல் பேசுகிறீர்கள்!
‘ஆபரேஷன் பெங்கால்’ என்றால் என்ன? எங்களை மீட்பதா, அழிப்பதா? இது வங்காள மக்களுக்கு எதிரான அவமதிப்பு. உங்கள் கட்சியில் பெண்களுக்கு அடிப்படை மரியாதையும் இல்லை.
நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். ஆனால் எங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டோம். நாட்டில் நடைபெறும் உங்கள் கட்சியினர் சார்ந்த ஆபாச சம்பவங்களைப் பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள், ஆனால் எங்களை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார்.”
மம்தாவின் இந்தக் கடுமையான விமர்சனத்தின் பின்னணியில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றை ஆதாரமாக குறிப்பிட்டு பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோகர் லால் தாக்கத், ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாகக் கூறப்பட்ட அந்த வீடியோ விவகாரம் இதனால் மீண்டும் அதிக கவனத்தை பெற்றது. இதைத் தன் பதிலில் மம்தா குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.