கன்னி தெய்வ வழிபாடு!

0
295

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னி பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன், உணவு சர்க்கரை பொங்கல் அதிரசம் அல்லது பணியாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.

அதோடு இறந்து போன கன்னிப் பெண்ணின் வயதிற்கு ஏற்றவாறு உடை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், போட்டு, வாசனையான ஜாதிமல்லி, குண்டுமல்லி, மரிக்கொழுந்து, உள்ளிட்டவற்றை படைக்க வேண்டும். அதோடு தீபமும் ஏற்ற வேண்டும்.

மேலும் புகைப்படத்தை வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி இறந்து போன கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

பிராத்தனை பலிதமாக தங்களுடைய ஆத்மார்த்தமான ஈடுபாடு மற்றும் வழிபாடு மிகவும் அவசியமாகும். இதனை கூட்டாக பகை மறந்து பங்காளிகளுடன் ஒன்றிணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும், அதன்பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.

படைத்த ஆடை மற்றும் மங்களப் பொருட்களை மூங்கில் கூடையில் வைத்து அதன் பிறகு வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும், முதலாம் ஆண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு வருடத்தில் தான் எடுக்க வேண்டும் எனவும், சொல்லப்படுகிறது.

கன்னிப்பெட்டி இருக்கின்ற அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி தூவம் காட்டலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது வீட்டை சுத்தம் செய்து அதன் பிறகு பெட்டியை திறக்க வேண்டும்.

பெட்டியை திறந்தவுடன் பூவாசம் மணக்கும் பூவாசம் வந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைக்கப்பட்டிருந்த துணியை குடும்பத்திலுள்ள நிறைவேறாத பிரார்த்தனை இருக்கின்ற பெண்களுக்கு வழங்க வேண்டும்.

இதனை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் எனவும், தெரிவிப்பார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்க்கிழமை தான் ஏற்ற நாள் என சொல்லப்படுகிறது.

சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்யபலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு மிக விரைவில் திருமண பாக்கியம் கைகூடும், செய்வினை கோளாறு நீங்கும், பேய், பிசாசு, நெருங்காது. நோய் நொடிகள் தீர்ந்து விடும், குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.