அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

0
73

திருப்பத்தூர்: பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குனராக பணியாற்றி 24 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் குடியேறிவிட்டனர். சேதுராமன் அவரது தந்தை வீடு உள்ள பகுதியில் இருந்து இரண்டு தெரு தள்ளி வசித்து வருகிறார்.

பாலகிருஷ்ணனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட பாலகிருஷ்ணன் நொடிந்துபோனார்.

இந்நிலையிலும் தன் பிள்ளைகளுடன் இருக்காமல் சொத்துக்களை பராமரித்துக் கொண்டு தனியாகவே வசித்து வந்துள்ளார். சேதுராமன் அவ்வபோது வந்து தந்தையை பார்த்துவிட்டு செல்வார்.

நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் சிலர் பாலகிருஷ்ணனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். வீடு முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. தடையங்களை அழிப்பதற்கு மிளகாய்த்தூளை நீண்ட தூரத்திற்கு தூவப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவர்கள் திருப்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் பாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலகிருஷ்ணன் தனியாக வசித்து வருவதை அறிந்துகொண்டு ‘பணத்திற்காக கொலை நடந்து இருக்கலாம் அல்லது சொத்துத் தகராறில் கொலை நடந்திருக்கலாம்’ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் கொலைக்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. ரத்த உறவால் தான் கொலை நடந்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது. பாலகிருஷ்ணனின் மகன் சேதுராமன் மீது சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலகிருஷ்ணனின் கொலையில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அத்தோடு குற்றவாளியையும் நெருங்கிவிட்டோம். இன்னும் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளி இவர்தான் என்று உறுதி செய்த பிறகு முழுத் தகவல்களையும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்று எஸ். பி விஜயகுமார் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K