#BREAKINGஎதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

0
78

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவையில் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் 66 இடங்களை தனித்து பிடித்த அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரண்டு தலைமைகள் இருப்பதால் யார் எதிர்க்கட்சித் தலைவராக அமரப் போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு அதிகமானதால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் அந்த கூட்டமானது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பித்த அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் சுமார் மூன்று மணி நேரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.