முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்!

0
81

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அவதூறு வழக்குகளில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் பொது மக்களின் மனநிலை தொடர்பாகவும், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், அவருடைய கருத்தை தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் இருப்பதாக தெரிவித்து இருவருடைய சார்பிலும் தமிழக அரசு 2 அவதூறு வழக்குகளை கடந்த மார்ச் மாதம் தொடர்ந்தது.இந்த வழக்குகளை விசாரணை செய்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த வழக்குகள் மறுபடியும் நேற்றைய தினம் நீதிபதி சிவகுமார் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட போது முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மன் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதி ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.