கோரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அரசு அதிரடி

0
71

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவ துவங்கியதிலிருந்து பரிசோதனை, தனிமை படுத்துதல் உள்ளிட்டவை உலக சுகாதார மையம் அளித்த வழிகாட்டுதல் பேரில் தான் பின்பற்றப்பட்டு வந்தது.

கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் பரிசோதனை மற்றும் தனிமைப் படுத்துதலுக்கான விதிமுறைகளை மாற்றி வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்த வரையில் சென்னையில் கொரோனா தொற்றின் வீச்சு அதிகமுள்ளது. இதனால் பரிசோதனை மற்றும் தனிமைப் படுத்துதலுக்கான விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் நபர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1875 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 1406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1837 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 12 பேர் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே, தமிழ்நாட்டில் இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1372 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705ஆக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K