சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு – எச்சரிக்கும் மாநகராட்சி

0
73

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபி. அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் நிறைவடைந்ததும் இது குறித்த செய்தி குறிப்பு வெளியானது.

அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பவர்கள், பூச்சித் தடுப்புத் துறை பணியாளர்கள்,
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 33,198 நபர்கள் கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சி மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல்நலனை 14 நாட்களுக்கு தொலைபேசி மூலம் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். சென்னை மாநகராட்சி நகர சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நோய் பாதிப்பு அதிகம் வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்ட 3,47,380 நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி Helpage India எனும் நிறுவனத்துடன் இணைந்து முதியோர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் ஒரு தன்னார்வலர் சராசரியாக 100 முதியோர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து தேவையானவற்றை அறிந்து, உரிய தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோவிட்-19 நோய் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 100 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருந்து (ஆர்சனிக் ஆல்பம்) கொரோனா நோய்த் தொற்று தடுப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 லட்சம் நபர்களுக்கான ஹோமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரையின் பேரில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணியினாலான தலா 3 முகக்கவசங்கள், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்குதல், வீடு வீடாகச் சென்று தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுத்தல், நோய்த் அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.