ஆசைக்கு அளவு மற்றும் அறிவு இல்லாமல் போனது! மூன்று பள்ளிமாணவர்கள் கவலைக்கிடம்!

0
92

கடலூர் மாவட்டத்திலுள்ள குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் கள்ளச் சாராயத்தை குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் தமிழ்மாறன் கபிலன் ஆகியோர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் இவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார்கள்.

வியாழக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பும் பொழுது அங்குள்ள ஒரு கரும்புத் தோட்டத்தின் வழியாக வந்துள்ளார்கள். அங்கு யாரோ கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த மாணவர்கள் 3 பேரும் இதை குடிக்க வேண்டுமென ஆசை கொண்டு பக்கத்தில் சென்று இருக்கிறார்கள். ஆர்வத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள் பழங்கள் மற்றும் எத்தனால் வாசனையில் கவர்ந்திழுத்து கள்ளச் சாராயத்தை குடித்து பார்க்க வேண்டும் என தோன்றியுள்ளது.

யாரும் இல்லாத காரணத்தால் கள்ளச் சாராயம் காய்ச்ச போடப்பட்டு இருந்த அந்த ஊறலில் இருந்து மூன்று மாணவர்களும் சிறிது குடித்து உள்ளார்கள். குடித்து விட்டு வீட்டிற்கு சென்று ஒவ்வொருத்தராக மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

பயந்துபோன மாணவர்களின் பெற்றோர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அன்பரசன் என்ற மாணவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு தான் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேல்சிகிச்சைக்காக ஜிம்பர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பு தோட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் வைத்தவர்கள் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவயதிலேயே ஆர்வமிகுதியில் அளவில்லாமல் ஆசையால் அறிவில்லாமல் இந்த செயலை செய்ய தூண்டி இப்பொழுது உயிருக்கே ஆபத்தாகி விட்டது.