கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

0
75

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி ஒளிப்பதிவாளர் மது மற்றும் உணவு தயாரிப்பாளர் சந்திரன் ஆகிய  3 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் இந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகர் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். தனது டிவிட்டரில் ‘மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து தூக்கம் வருவதில்லை. நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட ஸ்டுடியோவில் இதற்கு முன்னரும் இதுபோல சில விபத்துகள் நடந்துள்ளதால் அந்த பகுதியில் மண்ணின் தன்மை பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

author avatar
Parthipan K