எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிவாளம் இட ஓபிஎஸ் போட்ட ரகசிய திட்டம்!

0
119

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் அவர்களுக்கும், இடையே வெளிப்படையாக ஏற்பட்டு வரும் மோதல்களில் ஒரு முக்கியமான அடுத்த கட்ட நகர்வு நடைபெற்று இருக்கிறது. பசும்பொன் கிராமத்தில் மதுரையிலும் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

தேவர் குருபூஜைக்கு பசும்பொன் கிராமத்திற்கு செல்லாத ஓ பன்னீர்செல்வம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி ஆன நேற்றைய தினம் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் பசும்பொன் சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பின்னர் மதுரையில் பன்னீர்செல்வம் கூட்டிய ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வத்தின் குடும்ப வழக்கத்தின் அடிப்படையில் 60 நாட்கள் ஒரு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அந்த விதத்தில் தேவர் குருபூஜைக்கு தேவர் நினைவிடம் அமைந்திருக்கும் பகுதிக்கு அவர் வருகை தரவில்லை. இதனால் பெரிய குளத்திலேயே அன்றைய தினம் தேவருக்கு மரியாதை செலுத்தியதாக சொல்லப்படுகிறது, அடைப்பு என்று சொல்லப்படும் 60 நாட்கள் கட்டுப்பாடு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த சூழ்நிலையில், நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நேற்றைய தினம் பசும்பொன் செல்ல திட்டமிட்டார் பன்னீர்செல்வம் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்துடன் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ,மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நத்தம் விஸ்வநாதன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனுசாமி, மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் ஐயப்பன், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன். மற்றும் முன்னாள் சட்ட சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் பின்னால் அணிவகுத்ததாகச் சொல்லப்படுகிறது.

எடப்பாடியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பேட்டி கொடுத்த காரணத்திற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர் பஷீர் பசும்பொன்னில் பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார், இதனை நிர்வாகிகள் ஆச்சரியத்துடன் கண்டார்கள் இதுவே எடப்பாடி பன்னீரின் மோதலுக்கு பெரிய அடையாளமாக பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து மதுரையில் ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நேற்றைய தினமே நடத்தி முடித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் கேரள அரசு தடைகளை ஏற்படுத்தி வருகின்ற சூழ்நிலையில், தான் இது தொடர்பாக மதுரையில் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கக்கூடிய நூற்றாண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு உரிமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாங்கித்தந்தார். முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது, இதனை தொடர்ந்து மூன்று வருடங்களாக நீர்தேக்கத்தில் அனுமதிக்கப்பட்ட 142 அடி வரையில் எடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் இதற்கு கேரள மாநில அரசு எதிர்மறையாக செயல்பட்டு வருகிறது, முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக சொல்கிறது கேரள மாநில அரசு. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கசெய்யும் விதத்தில் 5 தென்மாவட்டங்களில் கட்சி விரைவில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார் பன்னீர்செல்வம்.

இருந்தாலும் முல்லைப் பெரியாறு அணை மட்டுமே இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது கூட்டத்தில் உரையாற்றிய பன்னீர்செல்வம் நான் எப்போதுமே தனி நபரை விட கட்சி பெரிது என்று கொள்கையின் மீது உறுதியாக இருப்பவன் இப்போது கட்சியை ஒற்றுமைப் படுத்தி வலிமைப் படுத்துவது முக்கியம் ஆனால் ஒரு சில தனிநபர்கள் இதற்கு இடம்கொடுக்காமல் கட்சியை தங்களுடைய பிடியில் வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இதனை நீங்கள் புரிந்து கொண்டு கட்சியின் ஒற்றுமைக்காக என்னுடைய பின்னால் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஆகவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக மட்டும் இந்த கூட்டம் கூட்டப்படவில்லை, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் ஒரு கடிவாளம் இட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என சொல்லப்படுகிறது.