இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

0
84

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்த ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு பல நாடுகளில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஏற்கனவே கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய வகையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், புதிதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருகிறது. நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் உள்ளவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றும், வெளிநாடு செல்கிற நபர்கள், வெளிநாடுகளில் இருந்து  வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்படி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. மேலும், மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

author avatar
Parthipan K