கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

0
76

கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த கல்மேடு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது.

இதனைப் பார்த்த கோழிப் பண்ணை காவலாளி பாலு, பண்ணை உரிமையாளர் பிரேம்குமாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அறிந்த பிரேம்குமார் பொன்னேரி தீயணைப்புத் துறையினறை தொடர்பு கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த தீ விபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள், தீவனம் மற்றும் குடோன் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பண்ணை முழுவதும் தீயில் எரிந்து சேதம் ஆனதால் 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K