முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

0
149

முல்லை பெரியாறு அணையில் ரூல் கர்வ விதிப்படி வரும் 20ஆம் தேதி 142 அடிக்கு நீரை சேமிக்க தமிழக நீர் வளத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

முல்லை பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை முன்னெடுத்து வருகின்றது. அணையில் 142 அடிக்கு 7.66 டிஎம்சி அளவிற்கு நீரை சேமிக்க 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு தினமும் சேர்க்க வேண்டிய நீரின் அளவை ஜனவரி மாதம் உச்ச நீதி மன்றம் நிர்ணயம் செய்தது.

சட்டசபை தேர்தல் நெருங்கியதன் காரணமாக, இந்த ரூல் கர்வ விதி நடைமுறையை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு தெரியாத இடத்தில் இது தொடர்பாக தகவலை வெளியிடாமல் நீர் வளத் துறையினர் சற்றே அடக்கி வாசித்ததாக தெரிகிறது. தற்சமயம் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது அதன்படி நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பின்னரே 142 அடிக்கு நீரை சேமிக்க முடியும்.

அண்மையில் கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அதிகாரிகள் அணையில் நீரை திறந்து விட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை எதிர்த்து அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் இறங்கினர் இது தமிழக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி அணையில் 140.4 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.. எதிர்வரும் 20ஆம் தேதி ரூல் கர்வ விதியின் படி நூற்று 41 அடியில் நீரைத் தேக்க நீர்வளத்துறை திட்டமிட்டிருக்கிறது. அணையின் பலத்தை நிரூபிக்கும் விதத்தில், வரும் 30ஆம் தேதிக்குப் பின்னர் 142 அடி நீரைத் தேக்கி அதன் பிறகு கிடைக்கும் உபரி நீரை வெளியேற்ற நீர்வளத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதன் மூலமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் இடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி நீங்கலாம் என்று தமிழக அரசு நினைக்கின்றது. அரசின் உத்தரவை அடுத்து இதற்கான வேலைகளில் மதுரை மண்டல நீர்வள துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.