கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!

0
86

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கடைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள உரிமையாளர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • காய்கறி சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும்.
  • காய்கறி சந்தையில் உள்ள அனைத்து கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்ப தெர்மோ மீட்டர், ஆக்ஸி மீட்டர் மற்றும் கிருமி நாசினி கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
  • சந்தைக்குள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
  • மொத்த காய்கறி விற்பனை அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • காய்கறி அங்காடியில் உள்ள நுழைவு வாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.
  • சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படும்.
  • கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.
  • கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அங்காடிக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • சாலையோர விற்பனை மற்றும் அங்காடிக்குள் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு கடையின் நுழைவு வாயில் முன்பும் கட்டாயமாக கிருமி நாசினி வைக்க வேண்டும்.
  • கடையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப்போக்குவரத்துகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை தோறும் அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனில் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் அங்காடிப்பகுதியில் ஒருவழிப்பாதை அறிமுகப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீர் செய்யப்படும்.
author avatar
Parthipan K