முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

0
67

திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் என்னென்ன செய்வோம் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.அவர்களுடைய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற இயலாது. இது கூடவா தெரியாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டசபையிலும் நேற்று இதுதொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற இயலாது என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் முக்கிய அறிவிப்புகள் கூட இடம்பெறவில்லை என்பதை தான் நாங்கள் தெரிவித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக காவிரி, கோதாவரி இணைப்பு மிக முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. அதுகூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதை தான் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம் என்று பேசியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கு பதிலளித்துப் பேசிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சிக்கு வந்து 40 தினங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் காவிரி, கோதாவரியை இனைக்கவில்லையா என்று கேட்டால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார். சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வந்தது கருணாநிதிதான் அதேபோல காவிரி மற்றும் கோதாவரி நதி நீரை இணைப்போம் என்று தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீரை கருணாநிதி சென்னைக்கு கொண்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வர காரணமாக இருந்தது எம்ஜிஆர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்களுடன் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எம்ஜிஆர். அதேபோல புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தி சென்னைக்கு குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்தவர் ஜெயலலிதா என்று தெரிவித்திருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய துரைமுருகன் எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் 400 கிலோ மீட்டருக்கு கால்வாய் கட்டியது கருணாநிதிதான் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஆரம்பித்தது அவர் தான் ஆனால் அதனை முடித்து வைத்தது கருணாநிதி என்று தெரிவித்திருக்கிறார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்..