இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழக அரசின் முதன்மை இலக்கு! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

0
82

அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தி கேள்விப்படும்போது எல்லாம் உண்மையை சொல்லவேண்டும் என்று சொன்னால் அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அறத்தையும், பண்பாட்டையும், அதிகமாக பேசும் ஒரு சமுதாயத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இப்படியான கேவலமான மற்றும் அருவருப்பான செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. என்பது வெட்கப்படக் கூடிய விஷயம். இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது விட்ராதிங்கப்பா என அந்த குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதிகளிலும் பொது இடங்களிலும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

சக உயிராக ஒரு பெண்ணை பார்க்கும் எண்ணம் ஆண்களுக்கு தோன்ற வரையில் இதனை தடுக்க இயலாது உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டலுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன.

அந்த சட்டங்களுக்கும் முன் நிறுத்தப்பட்டு இது போன்ற நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நான் இந்த சமயத்தில் உறுதி அளிக்கின்றேன் இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அது தொடர்பாக வெளிப்படையாக புகார் தருவதற்கு தைரியமாக முன்வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களிடம் மற்றும் தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார்களை வழங்க வேண்டும். அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவர்கள் எந்தவிதமான தயக்கமும் காட்டக்கூடாது என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த பிரச்சனையை மற்ற பிரச்சனைகளை விடவும் முக்கியமான பிரச்சனையாக தமிழக அரசு கருதி வருகிறது. பாலியல் தொல்லைகள், சீண்டல்கள், தொடர்பான புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதனை பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர இந்த அரசு எந்தவிதமான தயக்கமும் காட்டாது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது, அதற்காக நிதியம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் முறையாக செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்திருக்கிறது, அதோடு நான்கு மாவட்டங்களில் புதிதாக இந்த நீதிமன்றங்கள் அமைக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. எல்லா வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டு இருக்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்க இந்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

தமிழக அரசால் வெளியிடப்படும் எல்லா பாடப் புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மாணவர் உதவி எண் 14417 தொடர்பான விழிப்புணர்வு செய்தி வரும் கல்வி ஆண்டில் இருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும். அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி கல்லூரி நிர்வாகங்களும் காட்டவேண்டும் தங்களிடம் படிக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என கூறியிருக்கிறார்.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் எளிமையாகவும், இனிமையாகவும், பழக வேண்டும் ஒரே வீட்டுக்குள் தனித்தனி தீவுகளாக இருக்க வேண்டாம் அன்பு குழந்தைகளே உங்களை அன்புடனும், பாதுகாப்புடனும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. தயவுசெய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டி விட்டு மரணம் அடைகிறார் என பொருளாகிறது. வாழ்ந்து தான் போராட வேண்டும் வாழ்ந்து காட்டுவதுதான் சிறந்த பழிவாங்கல் அப்போது தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும் என தெரிவித்திருக்கிறார்.

ஆகவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாகவும், உங்களுடைய சகோதரனாகவும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம், நான் இருக்கிறேன், அரசாங்கம் இருக்கிறது இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.