நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

0
36
#image_title

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற சங்ககிரி நகரம் ஆட்டோ நகரம் என்ற பெயருக்கு சிறப்பு பெற்று விளங்குகின்றது. லாரி சார்ந்த தொழில்கள் சங்ககிரி பகுதியில் அதிகம் நடக்கின்றது. சங்ககிரி பகுதி சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இதனால் இந்த பகுதி போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகம் நிறைந்த சங்ககிரியில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு கவனம் செலுத்தி உரிய எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

போக்குவரத்து அதிகம் நிறைந்த சங்ககிரியின் சேலம் கொச்சி நெடுஞ்சாலையின் ஓரத்தில் லாரிகள் நிறுத்தப்படுகிறது. இதனால் பல கோர விபத்துக்கள ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்க லாரிகள் நிறுத்தும் இடத்தையும் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் சங்ககிரி பகுதியின் அருகே இருக்கும் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டத்தின் கொண்டலபட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அருகே ஈங்கூரை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகள் பிரியா அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ராஜதுரை மற்றும் பிரியா இருவருக்கும் சஞ்சனா என்ற ஒரு வயதுள்ள குழந்தை உள்ளது.

ராஜதுரைக்கும் பிரியாவிற்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பிரியாவின் பெற்றோர் பழனிசாமி மற்றும் பாப்பாத்தி இருவரும் சேர்ந்து எட்டு உறவினர்களுடன் நேற்று(செப்டம்பர்5) சேலம் மாவட்டம் கொண்டலபட்டிக்கு வந்தனர்.

ஆனால் ராஜதுரை மற்றும் பிரியாவின் சண்டை பேச்சு வார்த்தை மூலம் உடன்பட்டு வராததால் பழனிசாமி மற்றும் பாப்பாதி இருவரும் தங்களின் மகள் பிரியாவை தங்களுடன் அழைத்து செல்வதாக கூறி இன்று(செப்டம்பர்6) அதிகாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்றனர்.

ஆம்னி வேன் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர் அருகே செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி வேன் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

ஆம்னி வேனில் பயணம் செய்த பிரியா, பாப்பாத்தி, செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம் மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சான ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விபத்துக்கு காரணமாக லாரி பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.