சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
அதன்படி சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு காரணமாக, பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.
இதற்கு நடுவே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும், குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் 50 நாட்களை தாண்டியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.