விசேஷ வீட்டை துக்க வீடாக்கிய மதுபானம்! 6பேர் பரிதாப பலி!

0
109

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பாகல்பூர் என்ற கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் உள்ளூரைச் சேர்ந்த ஏராளமானோர் மதுவை வாங்கி குடித்து இருக்கிறார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகி மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்குப் பிறகு திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் மது குடித்த 6 பேர் திடீரென்று உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது, பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினார்கள், அப்போது ஒரு கிராமத்தில் நடைபெற்ற விசேஷ நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஒரு சிலர் மதுபானம் குடித்திருக்கிறார்கள் அதன் பின்னர்தான் அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து இந்த சம்பவத்தை அடுத்து 5 காவல்துறை மற்றும் 3 காலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு உயிரிழந்தவர்கள் குடித்த மது வகையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டத்தின் பிரிவுகளுடன் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 272 273 அதோடு 304 உள்ளிட்டவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மது குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.