தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்!

0
60

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில் தென்னிந்தியாவில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்த ஆலயங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் ஒடிசா மாநிலத்தில் இருக்கின்ற பூரி ஜெகநாதர் கோவில் வடிவமைப்பை போலவே இந்த திருக்கோவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு பார்த்த ராஜகோபுரம் பலிபீடத்தை தாண்டி சென்றால் 16 தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் இருக்கிறது இதற்கு நடுவில் கருடாழ்வார் இருக்கிறார்.

மூலவராக இருக்கும் பாண்டுரங்க பெருமாள் 12 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த சிலை சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அருகே ரகுமாயி தாயார் இருக்கிறார் 120 அடி உயர கோபுரமும் அதன் மீது ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசம் அதன்மேல் சுதர்சன சக்கரமும் கொடியும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.

இந்த திருத்தல பாண்டுரங்க பெருமாள் ஞாயிற்றுக்கிழமை மதுராபுரி மன்னன் அலங்காரத்தில் வியாழக்கிழமை பாத தரிசனத்திற்காக மிக எளிய அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளி கவச அலங்காரத்தில் சனிக்கிழமை வெங்கடாஜலபதி அலங்காரத்திலும், அருள்பாலித்து வருகிறார்.

மகாமண்டபத்தில் இருக்கின்ற கோவிந்தராஜ பெருமாள் திருப்பதி போலவே சனிக்கிழமை தவிர மற்ற தினங்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள் பாலித்து வருகிறார். பொதுவாகவே மூலவர் சந்நிதிக்கு முன்பாக இருக்கின்ற துவாரபாலகர்கள் கட்சிகளால் செய்யப்பட்டதாக இருக்கும் ஆனால் இங்கே இருக்கின்ற துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தால் ஆனவர்கள் என்று சொல்லப்படுகிறது.
தல விருட்சம் தமால மரம் துவாபரயுகத்தில் இந்த மரத்தின் கீழ் நின்று தான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசைக்கு ராதை உள்ளிட்ட கோபியரும், பசுக்களும், மயங்கியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே இருக்கின்ற இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுதல் நிறைவேறிவிட்டால் சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டு வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.