தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
94

1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த விதமான விதிமுறைகளும் இல்லாமல் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 14ஆம் தேதி பரிசீலனை செய்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் மாதம் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். அத்துடன், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எழுத்து திறன் தேர்வு கண்காணிக்க தாலுகா அளவில் துணை மாவட்ட ஆட்சியரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைபாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு தொடர்பாக 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் செல்லலாம். தாசில்தார்கள் மூலமாக தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும், அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.