கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை

0
159

கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை

மார்ச் மாதம் இறுதியில் கோரானா அச்சுறுத்தலால் மூடப்பட்ட பள்ளிகள், ஊரடங்கு நீட்டிப்பால் மீண்டும் பள்ளிகளை திறக்க முடியவில்லை.

இதனால் கடந்த கல்வியாண்டில் பயின்ற 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். வரும் ஜூன் மாதம் 15ம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்த அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நாள் தோறும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அது திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற ஐயம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து ஒருநாள் இடைவெளிவிட்டு வகுப்புகளை நடத்தலாம். அரசுப் பள்ளிகளை போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை இலவசமாகத் தரவேண்டும். பாடத்திட்டத்தில் 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கோரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கியிருக்க, தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தி கேட்பது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகியிருக்கிறது.

author avatar
Parthipan K