Unlock 1.0 – சென்னையில் எதுவெல்லாம் இயங்கும்?

0
88

Unlock 1.0 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் என்னவெல்லாம் இயங்கும் என்பதை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 % பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 50%பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளான ஜவுளி, நகை உள்ளிட்ட கடைகள் 50%
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இயக்கப்படக் கூடாது.

மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இயக்கப்படக் கூடாது.

வரும் 7ம் தேதி வரை டீ கடைகள், உணவு விடுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பார்சல் சேவை மட்டும் அளிக்கலாம். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8ம் தேதி முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 % அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் பயன்படுத்தலாம்.

ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே
பயணிக்கலாம். சைக்கிள் ரிக்க்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளது.

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குளிர் சாதன வசதியைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K