தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை – அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!!

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடைவிதிப்பது குறித்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சுரங்கங்கள் அமைக்க அனுமதி கிடையாது என கூறிய அவர், சுரங்கங்களை தடை செய்ய முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு எட்டாம் தேதி வருகை தர உள்ள நிலையில். இது குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்துவார் எனவும் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டமும் முதலமைச்சரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், திமுக அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய எந்த செயலிலும் அரசு ஈடுபடாது எனவும், விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.