மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் சூழ்ச்சியை முறியடித்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மக்கள் மத்தியில் பெருகும் செல்வாக்கு
மத்தியில் பாஜக அரசின் ஆட்சிகாலம் முடிவடைவதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த மாதம் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தேசிய அளவில் ஆளும் பாஜக தலைமையில் ஒரு அணியும்,காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்றொரு அணியும் எதிரெதிராக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,மதிமுக மற்றும் விசிக இணைந்து ஒரு அணியாகவும்,மறுபுறம் ஆளும் அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக இணைந்து மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்ததாலும், ஆளும் அதிமுக மற்றும் பாஜகவுடன் எந்த கட்சியும் கூட்டணியை உறுதி செய்யாததாலும் திமுக பெரும்பாலான பகுதிகளில் சுலபமாக வெற்றி பெறலாம் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெரும் நம்பிக்கையுடன் இருந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்த்த பாமக அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது அதே நாளில் பாஜகவும் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது மட்டுமில்லாமல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மிஞ்சும் வகையில் தொகுதி உடன்பாடும் பேசி முடிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவுடன் கூட்டணி வைத்தததால் பாமக நிறுவனரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியும், சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபரான மருத்துவர் ராமதாஸ் அவர்களை ஸ்டாலின் விமர்சனம் செய்தது சரியல்ல என அரசியல் ஆர்வலர்கள்,பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் பாமக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்ய போகிறோம் என்பது பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தனர்.அந்த வகையில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடும் பாமக வேட்பாளாரான தொழிலதிபர் சாம் பால் தன்னுடைய சமூக பணிகள் பற்றியும், தான் சார்ந்த பாமகவின் கடந்த கால செயல்பாடுகள் பற்றியும்,தேர்தலில் வெற்றி பெற்று தொகுதிக்கு என்ன செய்ய போகிறோம் என்பது பற்றியும் ஆக்கபூர்வமான வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தொகுதி மக்களிடம் எளிதாக பழகும் குணம் கொண்ட பாமக வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்கு கூடிக்கொண்டே வருகிறது. தொடர்ந்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளும் இதையே தெரிவித்தன. பல்வேறு ஊடகங்கள் நடத்திய அனைத்து கருத்துகணிப்புகளிலும் சாம் பால் மற்றும் அமமுக வேட்பாளர் தெஹலான் பாகவி என இருவர் மட்டுமே போட்டியில் இருப்பதாகவும்,தயாநிதி மாறன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தன.
இந்நிலையில் தான் மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் அவருடைய படத்தை மது பாட்டிலுடன் இருப்பது போல மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். இதை வெளியிட்ட போதே அந்த படம் உண்மையல்ல என்பதை பதிவு செய்த சாம் பால் இதை வெளியிட்டது தயாநிதி மாறனின் உதவியாளர் தான் என்பதை ஆதாரத்துடன் கண்டு பிடித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் காவல் துறையில் புகார் செய்தார். இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி தனி நபர் விமர்சனம் செய்ததாக கருதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி வைத்ததற்காக சம்பந்தமே இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்த ஸ்டாலினை போலில்லாமல் தன்னை பற்றிய பொய்யான விமர்சனமாக இருந்தாலும் அதை சட்டப்படி எதிர்கொண்டு வழக்கு தொடர்ந்த பாமக வேட்பாளர் சாம் பாலின் இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. கருத்துகணிப்புகளின் படி தேர்தலில் வெற்றி பெற்று தயாநிதி மாறனை விரட்டியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு முன்பே அவரின் சூழ்ச்சியை முறியடித்துள்ளார்.