226 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மீன் – எங்கு தெரியுமா…?

0
113

ஒரு மீன் 200 ஆண்டுகளை வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆச்சர்யப்பட்டாலும் அது தான் உண்மை. மீனை பராமரித்து வரும் மனிதன் உயிரிழந்தாலும் தலைமுறை, தலைமுறையாய் அன்பாக பழகி உயிர் வாழ்ந்து வந்துள்ளது அந்த அதிசய சிகப்பு மீன்.

நாம் வாழும் இந்த உலகம் ஊர்ஜிக்க முடியாத அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது. மனிதனை காட்டிலும் உலகில் உள்ள பிற உயிரினங்கள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வியப்பில் ஆழ்த்துகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வு தான் ஜப்பானிலும் நடந்துள்ளது. தண்ணீரை விட்டு வெளியே வந்தாலே உயிரை விடும் சாதாரண மீன் ஒன்று 226 ஆண்டுகள் வாழ்ந்த நிகழ்வு தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

சிகப்பு நிறத்தில் காணப்படும் ஹனகோ என்னும் மீன் 1751ம் ஆண்டு பிறந்துள்ளது. ஹனகோ மீன் ஸ்கார்லட் கோய் வகையை சேர்ந்தது. இந்த வகை மீனின் சராசரி ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஜப்பானில் வளர்ந்த ஹனகோவோ, கிட்டத்தட்ட 226 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளது. 1751ம் ஆண்டு பிறந்த ஹனகோ 1977ம் ஆண்டு இறந்துள்ளது. ஹனகோ மீனை பற்றி யாருக்கும் தெரிந்திடாத நிலையில் முதன் முதலில் அது குறித்த செய்தியை ஹனகோவின் கடைசி உரிமையாளாராக இருந்த டாக்டர் கோமேரி கோஷிஹாரா என்பவர் 1966 ஆம் ஆண்டு வானோலி நிலையத்தின் மூலம் மக்களிடம் பகிர்ந்துக்கொண்டார். அதாவது தலைமுறை தலைமுறையாக ஹனகோ என்ற சிகப்பு மீனை எங்கள் குடும்பம் வளர்த்து வருவதாகவும், கடையாக தான் தான் அதன் உரிமையாளர் என்றும் கோஷிஹாரா கூறியுள்ளார்.

பின்னர் மீனின் வயதினை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹனகோவின் வயதினை கணக்கிட அதன் இரு செவில்களை விலங்கு அறிவியல் ஆய்வகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் மசயோஷி ஹீரோ எடுத்து சென்றார். ஒரு மரத்தின் வயதை கணக்கிட அதில் உள்ள வளையங்கள் உதவுவது போல், மீனின் செதில்களை கொண்டு அதன் வயது கணக்கிடப்படுகிறது. அப்பொழுது ஹனகோ சுமார் 200 ஆண்டுகளையும் தாண்டி உயிர் வாழ்ந்தது கண்டறியப்பட்டது.

7.5 கிலோ எடையும் 70 செ.மீ. நீளமும் கொண்ட ஹனகோவை பற்றி அதன் உரிமையாளர் கூறும்போது “அவளும்(ஹனகோ) நானும் அன்பான நண்பர்களாக இருந்தோம். நான் குளத்தின் விளிம்பில் இருந்து அவளை ஹனகோ என்று அழைக்கும் போது, அவள் நீந்தி என்னருகே வருவாள். நான் அவளது தலையில் தடவி கொடுப்பேன். அதன் மூலம் அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். எங்களுக்கு இடையிலான அன்பின் காரணமாக அவளை தண்ணீரில் இருந்து எடுத்து தழுவிக்கொள்ள நான் நினைத்ததும் உண்டு” என்று ஒரு பெண்ணிடம் உள்ள அன்பை போன்று மீனின் மீதான அன்பை கோஷிஹாரா பகிர்ந்துக் கொண்டார்.