திண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!

0
122

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு காலத்தில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் முக்கிய புள்ளியாகவும் அதே சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தார் அதோடு அதிமுகவின் முக்கிய முடிவை எடுக்கும் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆனார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல ஐ. பெரியசாமி வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து நாட்கள் செல்ல செல்ல நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். காலப்போக்கில் அவருடைய ஆதரவாளர்கள் என்று கட்சியில் யாருமே இல்லாமல் போய்விட்டார்கள். அதன்பிறகு திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கை ஓங்க தொடங்கியது . அதே சமயத்தில் நத்தம் விஸ்வநாதனின் செல்வாக்கு கட்சியில் தேய்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட விரிசலில் நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் அணியில் இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில், தற்சமயம் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவருமே திண்டுக்கல்லில் செல்வாக்குடன் இருந்து வரும் நிலையில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் யாருக்கு அதிமுக தலைமை சீட் கொடுக்கப் போகிறது என்பதே தற்போது அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருப்பதாக சொல்கிறார்கள்.