பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

0
71

தமிழ்நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை காணொலிக் காட்சி மூலமாக வெளியிட்டிருக்கின்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் எல்லோருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை பாட்டாளி மக்கள் கட்சியே செலுத்தும் எனவும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மாதாமாதம் 500 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே இலவச மருத்துவ வசதி வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும். 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் 1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலமாக கொடுக்கப்படும் விவசாய கடன்களுக்கு 15% தள்ளுபடி வழங்கப்படும், அதேபோல தமிழகத்திலே நிர்வாக வசதிக்காக இரண்டாவது தலைநகராக திருச்சியும் மூன்றாவது தலைநகராக மதுரையும் அறிவிக்கப்படும், அதேபோல தமிழ்நாட்டின் தொழில் நகரமாக கோயமுத்தூர் மாவட்டம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டிலே சமீபத்தில் 6 புதிய மாவட்டங்கள் உதயமாகி இருக்கின்றன. இந்த நிலையில் மீதம் இருக்கின்ற மாவட்டங்களும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் 12 லட்சம் நபர்கள் வாழும் விதமாக மாவட்ட அமைப்புகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் மருத்துவர் ராமதாஸ்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உடைய சொத்து விபரங்கள் வருடந்தோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்படும் அது மக்கள் தணிக்கைக்கு விடப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் முடிந்த பின்னரும் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதா மாதம் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

23 தொகுதிகளில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த அளவிற்கு தெளிவான வரையறை உள்ள ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இதுபோன்ற தொலைநோக்குப் பார்வையுடன் தெளிவான அறிக்கை மூலமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சியினரை சற்றே அதிர வைத்து இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல தற்போது பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இருக்கும் ஆளும் கட்சியான அதிமுக கூட மூக்கின் மேல் விரல் வைப்பதாக சொல்கிறார்கள்.