மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!

0
31
#image_title

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!

நடிகர் விஷால் அவர்கள் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஷால், நடிகர் எஸ்.ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், நடிகை ரிது வர்மா, நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஷால் அவர்கள் தற்பொழுது பரபரப்பான வீடியோ ஒன்று வெளியிட்டு மும்பை சென்சார் போர்ட் மீது பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை நடிகர் விஷால் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால் அவர்கள் “வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை. ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில். CBFC மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமானது நடக்கிறது.

எனது மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக.

நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா??? வேறு வழி இல்லை. அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரத்தை வெளியிடுகிறேன். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு நபர்களின் வங்கி கணக்கு பற்றிய விவரங்களும் குறிப்பிட்டுள்ளார்.