கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

0
65

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்திலும் பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேண்டுகோளை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா ஆபத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக பொது மக்கள் பலர் முக கவசம் அணியாமலே வெளியே சென்று வருவதை தொடர்கின்றனர்.

இதனையடுத்து பிரதமர் வேண்டுகோளை மேலும் கட்டயமகாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.இதனையடுத்து சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை பிறப்பித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம் மற்றும் பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வெளியே எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் அவர்கள் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் சிறை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் சென்னை, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்கள் தான் கொரோனா பாதிப்பில் முறையே 3 இடங்களை வகித்து வருகின்றன. இதனையடுத்து தான் இந்த 3 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றப்படுவது குறித்து அறிவிப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, மும்பை போன்ற இடங்களில் முககவசம் அணிவது ஏற்கனவே கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

author avatar
Ammasi Manickam