இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?

0
83
galwan valley clash
galwan valley clash

லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள போங்காங் ஆற்றில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு மறுத்து வந்தது.

 

இந்நிலையில், முதல்முறையாக கல்வான் மோதல் குறித்து வாய் திறந்துள்ள சீன அரசு, கட்டளைத் தளபதி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. மேலும், மோதல் நடைபெற்ற வீடியோ பதிவையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 

 

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?

 

கல்வான் மோதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து வந்தன. இதனால், போர் ஏற்படும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கல்வான் பகுதியில் கூடுதலாக குவிக்கப்பட்டிருந்த ராணுவப் படையையும், தளவாடங்களையும் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.

 

இன்று இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் பத்தாவது கட்டமாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அப்போது எல்லைப் பிரச்சனை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

 

இதனிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், மோதல் தொடர்பான வீடியோவை சீன ஊடகங்கள் வெளியிட்டிருப்பதும், அதில், உயிரிழந்த வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், இந்திய ராணுவம் அத்துமீறி தாக்கியதாகவும் எடிட் செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

இந்த வீடியோவால் பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், மீண்டும் சீனா தனது படையை கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.