குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

0
88

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு படையினர் மீட்பு பணியில் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இந்த விபத்தில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்திருக்கிறது. 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் மாயமானவர்களை மீட்கும் பணிகள் விடிய, விடிய நடைபெற்று வருகிறது. இந்த உயிரெழுப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக விரும்புகிறேன். ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களை விரைந்து மீட்க வேண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.