அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

0
83

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதோடு தமிழகத்துடன் அன்றைய தினமே புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

சென்ற பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் முடிந்திருந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வந்தது.

அதாவது 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் அடிக்கடி அரசியல் கலவரங்கள் ஏற்படுவது வழக்கம் என்று சொல்கிறார்கள். அதன்படி ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் ஒரே முறையாக தேர்தல் வைத்தால் நிச்சயம் அங்கு கலவரம் ஏற்படும் என்று கணித்த தேர்தல் ஆணையம் 294 தொகுதிகளுக்கும் சுமார் எட்டு கட்டங்களாக தேர்தலை பிரித்து வைத்தது.

தேர்தல் ஆணையத்தின் கணிப்புப்படி ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் அந்த மாநிலத்தில் ஏதாவது ஒரு மூலையில் கலவரங்கள் நடைபெற்று தான் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் முடித்து வெற்றிகரமாக நேற்றைய தினம் அந்த மாநிலத்தின் எட்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.

இதற்கிடையில் தேர்தல் அனைத்தும் முடியும் வரையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதையும் வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கடைசி கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி தமிழகத்தில் திமுக தான் ஆட்சியில் அமர போகிறது என்று பல கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் இதில் டைம்ஸ் நவ் ஓட்டர்ஸ், இந்தியா டுடே, நியூஸ் 24 போன்ற பல கருத்துக் கணிப்புகளும் அதிமுக கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக 123 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஜான் கீ பாத் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.