தயவுசெய்து எங்களையும் காப்பாற்றுங்கள்! உக்ரைனின் ரஷ்ய நாட்டு எல்லையில் பரிதவிக்கும் தமிழக மாணவர்களின் வேண்டுகோள் செவிசாய்க்குமா மத்திய அரசு?

0
61

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் உக்கிரமான போருக்கு நடுவே இந்தியா உக்ரைனில் வாழும் தன்னுடைய நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகிறது.

இதுவரையில் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் பல்வேறு கட்டங்களாக விமானங்களை அனுப்பி உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் இந்திய மக்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்தநிலையில், உக்ரைனிலிருக்கும் அமெரிக்கர்கள், பாகிஸ்தானியர்கள், உள்ளிட்ட குடிமக்களை அந்த நாடுகள் முற்றிலுமாக கைவிட்ட நிலையில், இந்திய அரசு மட்டும் தன்னுடைய நாட்டு மக்களை அங்கிருந்து மீட்பதில் முழுமூச்சில் செயல்பட்டு வருவது உலக நாடுகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரையில் உக்ரைன் நாட்டில் இருந்து 60 சதவீத மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. எஞ்சியிருக்கும் 40 சதவீத மக்களையும் மீட்பதற்கான நடவடிக்கை இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் என்னதான் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் கூட இன்னும் ஒரு சிலர் அங்கேயே சிக்கி தவித்து வருகிறார்கள்.

இந்தியா தற்போது போலந்து, ருமேனியா, உள்ளிட்ட உக்ரைன் நாட்டின் எல்லை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்டு வருகிறது. ஆனால் அங்கு போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் போலந்து உள்ளிட்ட நாடுகளின் எல்லைக்கு வரமுடியாமல் உக்ரைன் நாட்டில் ரஷ்ய எல்லை பகுதியில் பல மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.

அதாவது போலந்து, ருமேனியா, உள்ளிட்ட உக்ரைன் நாட்டின் எல்லை நாடுகளில் இந்திய அரசாங்கம் விமானத்தை தயார் நிலையில் வைத்திருப்பதால் மாணவர்கள் உக்ரைனிலிருந்து அந்த வழியாக வெளியேறியவுடன் இந்திய மாணவர்களையும், பொது மக்களையும், பத்திரமாக மீட்டு வருகிறது மத்திய அரசு.

ஆனாலும் அதற்கு எதிர் புறத்தில் இருக்கும் ரஷ்ய எல்லையில் இதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதால் போலந்து, ருமேனியா, உள்ளிட்ட நாடுகளின் எல்லைக்கு வர முடியாத பல மாணவர்கள் ரஷ்யாவின் எல்லையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே போலந்து, ருமேனியா, உள்ளிட்ட நாடுகளின் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் மத்திய அரசு அதே போல ரஷ்யாவின் எல்லையிலும் தன்னுடைய நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு சிக்கியிருக்கும் மாணவர்களையும் இந்தியாவிற்கு பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்பதே அந்த மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆகவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரிலிருக்கின்ற விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் தொடர்வண்டிகளில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவ, மாணவிகளும், தொடர் வண்டிகளில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக, மீட்புப் பணிகள் நடைபெறும் நகரின் தெற்கு ரயில்வே நிலையத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெறும் கீவ் தெற்கு ரயில் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்வண்டி நிலையத்திற்கும் அதன் அருகே உள்ள இபிஸ் ஹோட்டலுக்குமிடையேயான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஏவுகணை தாக்குதலில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த ஏவுகணை தாக்குதலில் பலி ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது தொடர்பான தகவல் தற்போது வரையில் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் கீவ் ரயில் நிலையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கின்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.