உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்! 24வது நாளாக உக்ரைன் மக்கள் இடம்பெயர்வு!

0
101

ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 24வது நாளாக தொடர்ந்து மிகவும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் மற்றும் ஐநா சபை என்று அனைத்து தரப்பினரும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் ரஷ்யா எதையுமே காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தட்சிஷின் காயமடைந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இன்று பலியானதாக சொல்லப்படுகிறது.

ரஷ்ய படையெடுப்பிற்கு பின்னர் உக்ரைன் நகரங்களில் கிடைக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை செயலிழக்க செய்ய பல வருட காலம் ஆகலாம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

போர் முடிவடைந்தவுடன் ஒரு வகையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளில் உதவி தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனில் ரஷ்ய நடத்திவரும் கடுமையான ஒரு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்திருக்கிறார்.

தம்முடைய அறக்கட்டளை மூலமாக வழங்கப்படும் இந்த நன்கொடை போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், போர் பயம் காரணமாக, மரியுபோல் நகரிலிருந்து மனிதாபிமான வழித்தடங்கள் வழியே 4972 பேர் வெளியேறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகளுக்கும், உக்ரைன் நாட்டு ராணுவத்திற்கும், தீவிர போர் நடைபெற்று வருகிறது.மரியுபோல் நகரில் பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார் ஆனாலும் யாரும் பலியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ரஷ்யா நடத்திவரும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து ஏற்கனவே 30,20,000 பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மேலும் 5.6 மில்லியன் மக்களும் உக்ரைனில் போர் நடைபெறும் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வுக்கான புலம்பெயர்ந்தோர் நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.