மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

0
78

சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்றையதினம் சட்டசபையில் நடந்தது. அந்த சமயத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் முத்துசாமி உரையாற்றினார்..

சென்னை பெருநகர எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளை கண்காணித்தபோது அங்கே மிக விரைவாக வளர்ச்சி மற்றும் அதற்கான உள் கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிடட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள், அதோடு அரக்கோணத்தையும் ஒன்றிணைத்து சென்னை பெருநகர பகுதியை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்தை கேட்டு விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

அத்துடன் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரோடுகளை ஒன்றிணைக்கும் விதத்தில் ஒக்கியம், துரைப்பாக்கம், கண்ணகி நகருக்கும் இஞ்சம்பாக்கதிற்கும் இடையில் இதற்கு முன்னரே இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுமார் 180 கோடி செலவில் உயர்மட்ட சுழல் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறைந்த வருவாய் அல்லது மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் தவணை திட்டம் மறுபடியும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.

சென்னை மற்றும் மற்ற நகரங்களில் பல காரணங்களால் சேதமடைந்து இருக்கின்ற குடியிருப்புகள் தொழில்நுட்ப குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நான்கு வருடங்களில் மறு கட்டுமானம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிதைந்து போன 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் நடப்பு நிதி ஆண்டில் 1700 கோடியில் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலின் காரணமாக, பாதிப்படைந்த குடும்பங்களுக்கு 1610 கோடி ரூபாயில் வீடுகள் கட்டி தருவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுக்குமாடி திட்டப் பகுதியில் இருக்கின்ற தரைதளம் குடியிருப்புகள் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார்