கிராம சபை கூட்டத்தில் விவசாயியை அவமதித்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றம்!

Photo of author

By CineDesk

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கங்காகுளம் கிராமத்தில் கடந்த அக்டோபர்  2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மையப்பன் என்ற விவசாயி கேள்வி கேட்டுள்ளார். அப்போது இவ்விவசாயியை எம்.எல்.ஏ மான்ராஜ் மற்றும் பிஓடி மீனாட்சி முன்னிலையில் ஊரக செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்து  அவமதித்தார்.அப்போது தங்கபாண்டியனின் வேலையாளான ராசு என்பவரும் அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரான அம்மையப்பன் தங்கபாண்டியன் மீது புகாரளித்தார்.மேலும் தங்கபாண்டியன் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தங்கபாண்டியன் மற்றும் அவரது வேலையாள் ராசுவும் தலைமறைவான நிலையில் கடந்த 5ம் தேதி ராசுவை போலீசார்கள் நள்ளிரவில் கைது செய்தனர்.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தங்கபாண்டியன் கடந்த வெள்ளிகிழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

எனவே இவ்வழக்கில் மெத்தன போக்குகாட்டிய சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளான வன்னியம்பட்டி எஸ்ஐ. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் ஆகியோரை ஆயுத படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத விஏஓ ஸ்ரீதேவி மற்றும் கிராம உதவியாளர் முத்துலட்சுமியின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககோரியும் வட்டாச்சியர் செந்தில்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.