ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! 

0
136

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! 

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்த மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சென்னை அருகே உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி வயது 48. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அவர் குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். இவர்களது மகன் தேவேந்திரன் வயது 22. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தேவேந்திரன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதில் சில விளையாட்டுகளில் வெற்றி பெற்றதன் விளைவால் கம்பெனியின் பணம் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார். அதிக பணம் சம்பாதித்து விடலாம் என்ற பேராசையில் ரம்மியில் பணம் கட்டி விளையாடி உள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அதில் நஷ்டமாகவே வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து திருடிய பணத்தை கம்பெனியில் செலுத்தாமல் போனதால் கம்பெனி நிர்வாகம் கூடுவாஞ்சேரியில் போலீசில் புகார் செய்தனர்.

விசாரணையில் தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை  விரைவில் கட்டி விடுவதாக காவல் நிலையத்தில் உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் தேவேந்திரன் திடீரென தலை மறைவானதால் பணத்தை கட்ட முடியாமல் அவரது பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து கடும் மனம் உளைச்சலுக்கு ஆளான தேவேந்திரனின் தாய் செல்வி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு செல்வி தீயில் கருகி பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மகனின் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.